எல்லாம் நன்மைக்கே!!!
முன்னொரு காலத்தில்ஒரு நாட்டை மன்னன் ஒருவர் ஆண்டு வந்தார்.அவர் கோபம் மிகுந்தவர்.அவரருக்கு ஓர் மந்திரி இருந்தார்.எது நடந்தாலும் " எல்லாம் நன்மைக்கே" என்று கூறுவார்.
ஒரு சமயம் மன்னனின் கைவிரல் ஒன்று வெட்டப்பட்டு ஊனமடைந்து வலியால் துடித்தார்.வேதனைப்பட்டார்.ஆனால் அச்சமயத்தில் அமைச்சர் " எல்லாம் நன்மைக்கே ! கவலை வேண்டாம் அரசே" என்றார்.
அரசனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இப்படிப்பட்ட மந்திரிக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்.
ஒரு நாள் மன்னனும் மந்திரியும் வேட்டையாடும் போது வழி தவறி நீண்ட தூரம் சென்றுவிட்டார்.அங்கு பாழடைந்த கிணறு இருந்தது.மன்னன் மந்திரிக்குப் புத்தி புகட்ட கிணற்றில் தள்ளிவிட்டார்.அப்போதும் அமைச்சர், "எல்லாம் நன்மைக்கே" என்று பொறுமையாகக் கூறினார்.
பொழுது சாய்ந்துவிட்டது.மன்னன் திரும்பும் போது சில காட்டுவாசிகள் கூட்டமாக வந்து ன்னனைப் பிடித்துச் சென்று காளி கோவில் முன் நிறுத்தி பலி கொடுக்க இருந்தனர்.அப்போது அவர்கள் தலைவன் வந்தான்.மன்னனை ஏற இறங்கப் பார்த்து " விரல் ஊனமுள்ள இவனையா அழைத்து வந்தீர்கள்? ஊனம் எதுவும் இல்லாதவனைத் தானே பலி கொடுப்போம்.இவனை அவிழ்த்து விடுங்கள்" என்றதும் மன்னனை விடுவித்தனர்.
இப்போது மந்திரி சொன்னது நினைவிற்கு வந்தது.அவர் உடனே பாழும் கிணற்றிற்குச் சென்று மந்திரியைக் காப்பாற்றினார். "மந்திரியாரே! நான் தெரியாமல் உங்களுக்கு கெடுதல் செய்துவிட்டேன்.நீங்கள் சொன்னபடி 'எல்லாம் நன்மைக்கே' என்பதன் உண்மையை உணர்ந்து கொண்டேன்" என்று வருந்தினார்.
" வருந்த வேண்டாம் மன்னரே! என்னையும் நன்மைக்காகத்தான் தள்ளிவிட்டீர்கள்.உங்களுடன் நானும் வந்திருந்தால் என்னையல்லவா பலி கொடுத்திருப்பார்கள்?" என்றதும் மன்னனுக்கு அதிலிருந்த உண்மை புலப்பட்டது.