ஊர் மரியாதை.
நெடுங்காலத்திற்கு முன்பு கழுதையை வண்டியில் பூட்டி ஓட்டிவந்தனர்.
அந்த ஊரின் தலைவரிடமும் ஒரு கழுதை வண்டி இருந்தது.அதில் அவர் செல்லும்போது, ஊரில் இருக்கும் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் அவருக்கு குனிந்து வணங்கினர்.அந்த கழுதையோ, ஊர் மக்கள் தன்னைத்தான் வணங்கி, மரியாதை செய்கின்றனர் என்று எண்ணிக்கொண்டது.
ஊர்த் தலைவரின் வீட்டில் நாய், மாடுகள், குருவிகள் வளர்க்கப்பட்டன.ஒரு நாள் அவற்றிடம் கழுதை, "என்னை இந்த ஊர் மக்கள் அனைவருமே வணங்குகின்றனர்.இந்த ஊர் மரியாதை உங்களில் எவருக்கேனும் கிடைத்திருக்கிறதா?" என்று கேட்டது.
மாடுகள் " இல்லை " என்றன.
குருவிகள் " இல்லை " என்றன.
நாய் எதுவும் பேசாமல் படுத்திருந்தது.
" நீ என்ன சொல்ல விரும்புகிறாய்? " என்று கேட்டது கழுதை.நாய் சிரித்துக்கொண்டே, "அந்த மரியாதை உனக்கு அல்ல.நீ சுமந்து செல்லும் தலைவருக்கானது" என்றது.
கழுதைக்குக் கோபம் வந்துவிட்டது. "நாளையே நான் தனியாக ஊரைச் சசுற்றி வந்து, மக்களின் மரியாதை பற்றி நிரூபித்துக் காட்டுகிறேன்" என்று கூறியது.மறுநாள் கழுதை தலைவர் இல்லாமல் ஊருக்குள் வலம் வந்தது.ஆனால் பரிதாபம், யாரும் கழுதையைக் கண்டுகொள்ளவே இல்லை.
இதுநாள் வரை கிடைத்து வந்த மரியாதை நமக்கானது அல்ல என்கிற உண்மை கழுதைகக்கு அப்போதுதான் தெரிந்தது.