சிறுவனின் நற்குணம்.
சரவணன் ஐந்தாம் வகுப்புப் படிக்கிறான். சைக்கிள் ஓட்டத் தெரியாது என்பதால் தனது அப்பாவின் சைக்கிளை ஓட்டப் பழகி வந்தான். சாலை வளைவில் திரும்பும் போது எதிரில் வந்த பலூன் வியாபாரியை அவன் கவனிக்கவில்லை.அவர் மீது மோதிவிட்டான்.
அவர் கீழே விழுந்து, அவர் கையில் வைத்திருந்த பலூன்கள் அருகில் இருந்த முள்வேலியில் பட்டு வெடித்து விட்டன.அந்த வியாபாரி சிறுவன் சரவணனை சிறிதும் திட்டவில்லை.மாறாக சைக்கிளை கவனமாகப் பார்த்து ஓட்டச் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
ஆனால் சரவணனுக்கு மனம் தளவில்லை. வெடித்த பலூன்களின் மதிப்பு எப்படியும் 500 ரூபாய் இருக்கும்.அதைக் கொடுத்து விடுவதுதான் சரி என நினைத்தான்.
அதற்காக உண்டியலை உடைத்து விடுவதுதான் சரி என நினைத்தான். உண்டியலை உடைத்தான்.பணம் போதுமானதாகஇல்லை. நடந்ததை அம்மா,அப்பாவிடம் சொல்லவும் துணிச்சல் இல்லை.அதனால் இருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு அந்த வியாபாரியின் வீட்டுக்குச் சென்றான்.அவர் இவனை சிறிதும் எதிர்பார்க்கவில்லை.வரவேற்று உபசரித்தார்.
சரவணன் தயங்கிக்கொண்டே, "எங்கிட்ட இவ்வளவு காசுதான் இருக்கு.உடைஞ்ச பலூன்களுக்குப் பதிலாக வச்சிக்கோங்க" என்றான்.
"எனக்கு நஷ்டம் ஆகக் கூடாதுன்னு பணம் கொடுக்கத் தோன்றியதே அதுவே போதும்.பணம் எல்லாம் வேணாம்"என்று மறுத்தார்.
"இல்லை.....என்னால் தான் பலூன்கள் உடைஞ்சது". என்றான் சரவணன்.
"பரவாயில்லை.ஐந்தாறு பலூன்கள்தான் வெடிச்சது.பலூன்கள் மொத்த விலைக்கு வாங்கினதால 100 ரூபாய்தான் இழப்பு.அதையும் நீ எனக்குத்தர வேணாம்."என்றார்.
" இல்ல.....100ரூபாயாவது வாங்கிக்கோங்க" என்றான் சரவணன்.
"சரி.....வாங்கிக்கிறேன் என்று வாங்கிய பலூன் வியாபாரி, அந்த தொகைக்கும் மேலாக பலூன்களை சரவணனுக்குக் கொடுத்தார்.
"இது என் அன்புப் பரிசு.மறுக்கக் கூடாது" என்றார்.சரவணனும் ஏற்றுக்கொண்டான்.
ليست هناك تعليقات:
إرسال تعليق