# பனைமரம் #
பனை மரம் என்பது ஆங்கிலத்தில் "palm tree" என்று அழைக்கப்படும்.
பொது வழக்கில் மரம் என்று வழங்கப்படினும் இது மர வகையைச் சார்ந்தது அல்ல.இது புல் இனத்தைச் சார்ந்தது.
பனையின் வளர்ச்சி :
பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றி நேராக சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையாது. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 – 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.
பனை தமிழ் நாட்டின் மாநில மரமாகும்.
பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் ஆகுமென கருதப்படுகிறது.
தூக்கணாங்குருவி :
இதில் தூக்கணாங்குருவிகளின் இருப்பிடமாக இருப்பதைப் பார்க்கலாம். இதன் ஓலைகளில் தூக்கணாங்குருவிகளின் தொங்கும் கூடுகள் பார்க்கும் பொழுது அவ்வளவு அழகாக இருக்கும்.
சல்லிவேர்களின்
அதிசயம் :
ஒரு 5 வருடங்கள் வளர்ந்த பனை மரத்தில் 1000- 1500 சல்லி வேர்கள் இருக்கும் .மழைக்காலங்களில் மழை பெய்யும் பொழுது இந்த 1500 சல்லி வேர்களின் வழியாக மழைநீர் பூமிக்கு அடியில் ஒரு பெரிய பைப்பில் தண்ணீர் போவது போல் சென்று கொண்டே இருக்கும்.
ஒரு இடத்தில் நூற்றுக்கணக்கான பனை மரங்கள் இருந்தால் இந்த சல்லி வேர்களின் வழியாக செல்லும் மழை நீர் ஒரு பெரிய குளம் போல் பூமிக்கு அடியில் தேங்கி நிற்கும். நிலத்தடி நீர்மட்டம் உயர வழி வகுக்கும்.
ஒரு வளர்ந்த பனைமரம், 15,000-20,000 லிட்டர் தண்ணீரை மழை காலத்தில் பூமிக்கு அடியில் சேர்த்து வைக்கும் திறன் கொண்டது.
எனவே நாம் நடும் பல்லாயிரக்கணக்கான, லட்சக்கணக்கான பனை மரங்கள் வளரும் பொழுது ,ஒரு பெரிய குளம் போல் /ஏரி போல் பூமிக்கு அடியில் தண்ணீரை சேர்த்து வைக்கும்.
எனவே, உங்கள் ஊரில் உள்ள நீர்நிலைப் பகுதிகளில்,குளம் குட்டைகளில் வயல்களில், வரப்புகளில், ஆற்றங்கரை ஓரங்களில் நிறைய நிறைய பனை விதைகளை நட்டு அடுத்த தலைமுறைக்கு நிலத்தடி நீர் பெருக,மண் வளம், மழை வளம் பெருக உதவுங்கள்.
பனையின் வகைகள் :
பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன.
அவை,
1. ஆண் பனை, 2. பெண் பனை, 3. கூந்தப்பனை, 4. தாளிப்பனை, 5. குமுதிப்பனை, 6.சாற்றுப்பனை, 7. ஈச்சம்பனை, 8. ஈழப்பனை, 9. சீமைப்பனை, 10. ஆதம்பனை, 11. திப்பிலிப்பனை, 12. உடலற்பனை, 13. கிச்சிலிப்பனை, 14. குடைப்பனை, 15. இளம்பனை 16. கூறைப்பனை, 17. இடுக்குப்பனை, 18. தாதம்பனை, 19. காந்தம்பனை, 20. பாக்குப்பனை, 21. ஈரம்பனை, 22. சீனப்பனை, 23. குண்டுப்பனை, 24. அலாம்பனை, 25. கொண்டைப்பனை, 26. ஏரிலைப்பனை, 27. ஏசறுப்பனை, 28. காட்டுப்பனை, 29. கதலிப்பனை, 30. வலியப்பனை, 31. வாதப்பனை, 32. அலகுப்பனை, 33. நிலப்பனை, 34. சனம்பனை.
காணப்படும் இடங்கள் :
ஆசிய நாடுகளில்தான் பனைகள் அதிகம் காணப்படுகின்றன.தற்காலத்தில் ஆசியாவில் இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனீசியா, மியன்மார், தாய்லாந்து, வியட்நாம், சீனா போன்ற நாடுகளிலும், கொங்கோ போன்ற மேற்கு ஆபிரிக்க நாடுகளிலும் காணப்படுகின்றன.
பயன்கள் :
1. நுங்கு, பதநீர், பனை வெல்லம், பனங்கிழங்கு , பனம்பழம், பனங்கற்கண்டு , பனங்கற்பட்டி நுங்கு ஜுஸ் போன்ற உணவுப் பொருட்கள் கிடைக்கிறது.
2. கூரை வேய பனை ஓலைகள், கைவினைப் பொருள்கள், நுங்கு வண்டி, விசிறி,வேலி அமைத்தல் என பல பயன்கள் உள்ளன.
3. மேலும் பனை மரங்கள் மரச்சட்டங்கள் செய்ய பயன்படுகின்றன.
4. பதநீர் செரிமானத்தை அதிகப்படுத்துகிறது.பதநீர் உடல் சூட்டை தணிக்கிறது, வயிற்றுப் புண்களை குணப்படுத்துகிறது.
5. பனங்கற்கண்டு தொண்டைப் புண்களை குணப்படுத்துகிறது, உடல் சூட்டை தணிக்கிறது.